வரமா ...சாபமா?--- ஸ்டெர்லைட் ஆலை..ஒர் அலசல்

>> வியாழன், 20 ஜூன், 2013

 வரமா ...சாபமா?--- ஸ்டெர்லைட் ஆலை..ஒர் அலசல்

தூ
த்துகுடியில் இயங்கும் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையை அதிரடியாக இழுத்து மூடி தமிழக அரசு சுற்றுச்சூழல் மாசுபாடுக்கு எதிரான சொல்லாடல்களை தேசமெங்கும் தீவிரபடுத்தியுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தடையை எதிர்த்து ஸ்டெர்லைட்  நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
மார்ச் 23 ம் தேதி அதிகாலை ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து சல்பர் டை ஆக்ஸைடு வாயு அளவுக்கு அதிகமாக வெளியேறியதால் தூத்துக்குடி மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை அடைப்பு ,மூச்சு திணறல் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. அப்புகார்களின் அடிப்படையில் மறுநாள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் 3 நாட்களில் விளக்கம் கேட்டும் ,அப்படி தராதபடசத்தில் ஏன் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்ககூடாது ? என்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது.அதற்கான இரண்டு விளக்கங்களை 27 மற்றும் 28 தேதிகளில் நிர்வாகம் வழங்கியது.




விளக்கத்தை ஏற்க மறுத்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக தொழிற்சாலையை மூடவும் ,  மின்சாரத்தை நிறுத்த மின்வாரியத்திற்கும் உத்திரவிட்டது.இதனை எதிர்த்து  நிர்வாகம் தொடுத்த வழக்கு  பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி. எம் .சொக்கலிங்கம் ,நாகேந்திரன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.போராட்ட குழு சார்பாக தேசிய சுற்றுப்புறச் சூழல் அறக்கட்டளையை சேர்ந்த பாத்திமா பாபு , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக வழக்கறிஞர் அப்துல்சலீம் ஆகியோர் ஆஜரானார்கள்.
விவாதத்தில் நிர்வாகத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபலான் தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியை சுட்டி காட்டி தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறவில்லை அது பொய்யான கூற்று எனவும்  சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள  ஸ்பிக் உள்பட பல ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
விவாதங்களின் இறுதியில் இடைக்கால தீர்ப்பாக ஒரு தலைவர் ஒரு உறுப்பினர் உள்ளடங்கிய  நிபுனர் குழு அமைப்பது என்றும் அவர்கள் தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கையை 29ம் தேதி தாக்கல செய்யவும் உத்திரவிடப்பட்டது.
ஆய்வு செய்ய  சென்னை ஐஐடி பேராசிரியர் பி.எஸ்.டி. சாய் தலைமையில்  ஐஐடி பேராசிரியர் லிஜி பிலிப் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கூடுதல் தலைமைப் பொறியாளர் ஆர். மோகன் நாயுடு, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு பொது மேலாளர் பி. சுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் விசவாயுக் கசிவு நிரூபிக்கப்பட்டால் நிரந்தரமாக மூடப்படும் என்று சென்னையில் பசுமைத் தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக போராடும் குழுவினர்க்கு நம்பிக்கையை அளித்துள்ளது .(மிக முக்கிய போராட்டங்கள் குறித்து பெட்டி செய்தியில்)
தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து நீண்டகாலமாக களப்பணியாற்றி வரும் சுற்றுச்சூழல் ஆர்வளரமும் எழுத்தாளருமான ஜெய்ராமிடம் கேட்டபோதுஏற்கெனவே வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஸ்டெர்லைட் நிருவனம் மகிழ்ச்சியில் தான் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் அதன் பங்குகள் சந்தையில் கனிசமாக விலை உயர்ந்து இருக்கிறது. 100 கோடி என்பது அவர்களுக்கு அபராதமே இல்லை.நிபுணர்களின் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம்என்று வருத்ததுடன் சுட்டி காட்டுகிறார்.
தமிழ் ஆழி கட்டுரைக்காக  ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டபோது தனிப்பட்ட பெயரை  முன்வைக்கவேண்டாம் என்ற கோரிக்கையோடு உயரதிகாரி ஒருவர் நிர்வாகத்தரப்பில் பேசினார். “எப்போது வேண்டுமானாலும் யார் விரும்பினாலும் தொழிற்சாலையை பார்வையிடலாம்.நச்சு வாயு எதுவும் வெளியேறவில்லை. காரணம் 21 மற்றும் 22 தேதிகளில் தொழிற்சாலை செயல்படவில்லை.23 ம் தேதி தான் செயல்படுத்த ஆரம்பித்தோம். அன்று காலையில் பொதுமக்களின் புகாரை அடுத்து காலை 9 மணியளவில் ஆர்.டி.ஓ தலைமையில்  ஆய்வு செய்தார்கள்.அந்த ஆய்வின் அடிப்படையில் 24ம் தேதி மாவட்ட ஆட்சியர் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்என்கிறார் நிர்வாகத்தின் சார்பாக.
இதனை மறுக்கும்  ஜெய்ராம் “ கடந்த அக்டோபர் 12 முதல் மார்ச்13 வரை ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து 83 முறை வாயு வெளிவந்துள்ளது .ஆனால் தற்போது வெளிவந்துள்ளது மக்களுக்கு ஆபத்தை விளைவித்திருக்கிறது.இது போல் மீண்டும் ஒரு முறை  பெரிய விபத்து நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் ? தொழிற்சாலை செயல்ப்டுத்த சோதனை ஓட்டம் 4-6 மணிநேரம் நடக்கும்..அந்த நேரத்தில் தான் விபத்தே நடந்திருக்கிறது என்கிறார்
தாமிர தொழிற்சாலைகள் மிகுந்த ஆபத்தானவை. 1200 செல்சியசில் தாமிரத் தாதுக்களை வெப்பத்திற்கு உள்ளாக்கும் போது அதில் உள்ள இரும்பு,ஆர்செனிக்,ஈயம்,கேட்ரியம்,குரோமியம் ஆகியவற்றிலிருந்து தாமிரத்தை பிரித்தெடுக்கிறார்கள்.அப்போது சல்பர் –டை-ஆக்ஸைடு வெளிப்படுகிறது.20000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யும் போது 4 கிலோ சலபர் டை ஆக்ஸ்டைடு வெளியிடப்படுகிறது..இதில் வெளியிடும் நச்சு வாயுவால் மட்டும் ஆபத்து அல்ல. வெளியேற்றப்படும் ஸ்லாக் எனப்படும் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஜிபசம் கழிவுகள் மிகுந்த ஆபத்தானவை. இவை மக்களுக்கு நுரையிரல் பிரச்சனையை உருவாகும். கழிவுகளில் கலக்கும் மழைநீர் நஞ்சாகி  பல்வெறு நீர்நிலைகளிலும் கலக்கிறது. கழிவு நீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ள்ன .அந்த கழிவு நீர் சிள்ளான் கன்மாயில் கலந்த்தால் அந்நீரை குடித்த ஆடு,மாடுகள் இறந்து போனதை நினைவில் கொள்ளவேண்டும்.விவசாய பூமியில் இந்த நீர் கலப்பதால் நிலமும் நஞ்சாகிறது . இதனால் நிலம் நீர், காற்று என்று அனைத்தும் நஞ்சாகிறதுஎன்கிறார்  ஜெயராம்.
ஆலை நிர்வாகமோ ஜீரோ டிஸ்ஜார்ஜ் மூலம் நீரை நாங்கள் மறுசுழற்சி செய்கிறோம்.நீரை வெளியேற்றுவதில்லை என்கிறது. மழைநீரை எப்படி தடுக்கமுடியும்? கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்கவே இயலாது என்கிறார் ஜெய்ராம்.
தொழிற்சாலை அமைக்கும் போது 250 மீட்டர் பசுமை தடுப்பு அமைக்க இருந்த சட்டம் 25 மீட்டர் ஆனது.  சில நாட்களுக்குள் மாறியது  புரியாத புதிர் அல்ல!அதையும் கூட  செய்யவில்லை.மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கி. மீ துரத்தில் தான்  இருக்கவேண்டும் என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.லாபம் ஒன்றை மட்டுமே குறியாக செயல்படும் நேர்மையற்ற நிருவனம். இவர்களை எப்படி நம்புவது ?என்று கேள்வி எழுப்புகிறார் போராட்ட களத்தில் முன்னனியில் இருப்பவரும் தேசிய சுற்றுப்புறச் சூழல் அறக்கட்டளையை சேர்ந்த பேரா.பாத்திமா பாபு
இதனை மறுக்கும் நிருவனம்பசுமை தடுப்பு அமைத்துள்ளோம்.சுமார் 500 கோடி ரூபாய் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்காக செலவிட்டு இருக்கிறோம்.இதுதவிர  சாலை அமைத்தல் ,காப்பகஙகளுக்கு மற்றும் பள்ளிகளுக்கு உதவியும் வருகிறோம்.என்கின்றனர்.
நிருவனம் வியாபார வேலையை பார்க்கட்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இயக்குவதே முக்கியமே தவிர காப்பகங்களுக்கு உதவுவது அல்லஎன்கிறார் ஜெய்ராம்.
இந்தியாவில் மூன்று நிருவனங்கள் தாமிர உருக்கு துறையில் இயங்கி வருகின்றன். ஸ்டெர்லைட் தவிர ஹிண்டல்கோ மற்றும் ஹிந்துஸ்தான் நிருவனங்கள். இந்தியாவின் தாமிர தேவை வருடத்திற்கு 5 லடசம் டன். ஸ்டெர்லைட் வருடத்திற்கு 4 லடசம் டன் தாமிரம் உற்பத்தி செய்து உள்நாட்டு தேவைக்கு 50 சதவீதம் பங்களிப்போதோடு மட்டுமன்றி  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.இதனை சார்ந்து சுமார் 1000 உபதயாரிப்பு ஆலைகள் உள்ளன. சரக்குபோக்குவரத்து ,நீர்வழி போகுவரத்து உடபட  500 க்கும் மேற்பட்ட தொழில்களின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் காரணமாக இருக்கிறது..ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நம்பி 23,000 குடும்பங்கள் உள்ளது. ஸ்டெர்லைட்டின் சமுக ந்ல திட்டங்கள் மூலம் தூத்துக்குடி சுற்றியுள்ள சுமார் 1.5 லட்சம் பேரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கிறது. தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சியில் ஸ்டெர்லைட்டின் பங்கு 3.3 விழுக்காடு.வருடத்திற்கு சுமார் 1800 கோடி ரூபாய் வரியாக அரசுக்கு செலுத்துகிறது. துத்துக்குடி துறைமுகத்தின் வருவாயில் சுமார் 25 விழுக்காடு அளவிற்கு ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் கிடைக்கிறது.
இத்தகைய தகவல்களை சுட்டி காட்டும் நிர்வாகம் ‘ எங்களுக்கும் தேசத்தின் மீது அக்கறையுண்டு.நாட்டின் வளர்ச்சியில் பங்கு உண்டு.திடிரென்று தொழிற்சாலையை மூடினால் தாமிரத்திற்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும்.வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யவேண்டும் அத்னால் விலை ஏற்றம் ஏற்படும்.மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கு அவை  தடைக்கல்லாக இருக்கும்.இது நாட்டுக்கு பொருளாதார சிக்கலை உருவாக்கும் “ என்கிறது.

இந்த விவகாரத்தில் சுற்றுப்புறச்சூழலாளர்களுக்கும் தொழிற்துறையாளர்களுக்கும் இடையில் வழக்கம் போல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.  இது போன்ற விஷயங்களில் மக்களின் நலனே பிரதானம் என்கிறார் தமிழ்நாடு  இன்வெஸ்டர்ஸ் அசோசியசன் தலைவரும் மணிவைஸ் கன்சல்டிங் இயக்குனுருமான ஷியாம் சுந்தர் 
மக்களின் பாதுகாப்பே முதன்மையானது. அதில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது.மக்களின் உயிர்க்கு அச்சத்தையோ கேடோ ஏற்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு எதிரான தொழிற்சாலைகளை முடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிறார் அவர்.
“சமுகநலன் மட்டுமே முதனமையானது. தொழிற்சாலைகளை  நடுநிலையான நிபுணர் குழு அமைத்து  ஆய்வு செய்து அதன் முடிவுகளை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லை என்று தெரிந்த பிறகு ஒரு தொழிற்சாலையை மூடுவது என்பது ஜனநாயக நாட்டில் தனி மனிதனின் உரிமையை பறிக்கும் செயல்.தூத்துக்குடியை பொருத்தவரை சல்பர் டை ஆக்ஸைடு வெளியிடும் அனைத்து தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைப்பது தெரியவந்தால் அதனை மூடுவது தான் சரியான செயலாகும். அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பீடு என்பது அரசுக்கு அல்லது தனிமனிதருக்கோ என்றாலும் அது பொருட்டே அல்ல. மனிதர்களின்  வாழ்வு மீது நடத்தப்படும் எந்த வீபரீதமும் ஒரு நற்சமுகத்திற்கு இழுக்கே.என்கிறார் ஷ்யாம் சுந்தர்.  .
ஸ்டெர்லைட் நிர்வாகம் அடுக்கும் காரணங்களை  பேரா.பாத்திமா பாபு  கடுமையாக மறுக்கிறார். சில ஆயிரம் பேருக்கு பணியை கொடுத்துவிட்டு 6 லடசம் மனிதர்களின் வாழ்வை பறிக்கலாமா?நச்சு வாயு கசிந்த அன்று சுமார் 800 க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.ஆனால் ஆலை நிர்வாகம் தகவல் அறியும் சட்ட்த்தின் மூலம் ஒருவர் கூட சிகிச்சை பெறவில்லை என்று சான்றிதல் பெற்றிருக்கிறது. ஆனால் 24 ம் தேதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மக்கள் சிகிச்சை பெற்றார்கள் என்று சொல்லியுள்ளார். இடையில் என்ன நடந்தது ? என கேள்வி எழுப்புகிறார்.
ஸ்டெர்லைட் நிர்வாகமோ “. சுமார் 4000 பேர் பணியில் உள்ளனர்.மருத்துவ கண்காணிப்பிலும் உள்ளனர். இதுவரை எந்த உடல்சார்ந்த பிரச்சனையும் இல்லை என்கிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 2508 பேர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அரசிடம் இருந்தே பெற்றுள்ளார் நைனார் குலசேகரன் என்பதை சுட்டிகாட்டும் பேரா. பாத்திமா பாபு சமீபத்தில் மட்டும் ஜெயிலானி தெரு,தெற்குத்தெரு,மா.கா தெரு இந்த குறுகிய பகுதியில் மட்டும்8 பேர் இறந்துள்ளனர்.2 பேர் மோசமாக நிலையில் உள்ளனர் 27 பேர் சிகிச்சையில் உள்ளனர்என்கிறார். .
பச்சில் ஆல்வாய் ஓடையில் மழை காலங்களில் கழிவு நீரையும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள் திறந்து விடுகின்றன. இது நேரடியாக கடலில் கலப்பதால் கடலின் வளமே பாதிக்கப்படுகினறது.சிப்காட் பகுதியை சுற்றி உள்ள மக்கள் வாழ் பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு மஞ்சள் நிறத்தில் உள்ளதுஎன்கிறார் 94 ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக தூத்துக்குடியில் போராடி வரும் அமைப்புசாரா தொழிளாலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பளர் கிருஷ்ணமூர்த்தி.
.மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருகிறது என்கிறது தகவல்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது என்று ஆய்வில் தெரிவித்துள்ளது.இதற்கு மிக முக்கிய காரணம் ஸ்டேர்லைட் ஆலை என்கிறார்கள் போராட்ட குழுவினர்.
தூத்துக்குடியை சுற்றி  நிலக்கரி மூலம் சுமார் 16.500மெக.வாட் மின்சாரத்திற்கான புதிய திட்டங்களாலும் வெளிப்படும் சல்பர் டை ஆக்ஸைடு கடுமையாக வெளிப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் இருக்கும் பாண்டியன் தீவு சாம்பல் கழிவுகளால் நிரம்பி உள்ளது.இத்தீவுகளை காக்க 140 கோடி ரூபாய் ஐக்கியநாடுகள் சபை தந்துள்ளது. துறைமுகத்தில் இருந்து 3 கி.மீ சாம்பால் கழிவுகளால் மூடப்படுள்ளது. இது தூத்துக்குடி நகரத்தை எங்கே கொண்டு போய் முடியுமோ?என்று வேதனைப்படுகிறார் கிருஷ்ணமுர்த்தி.
2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. நிகர லாபம் ரூ 1,657 கோடி (விற்பனை மதிப்பில் 8.6%). இந்த லாபத்தில் 56.64% (ரூ 939 கோடி) டுவின் ஸ்டார் என்ற லண்டனைச் சேர்ந்த வேதாந்தா குழும நிறுவனத்துக்கும், 12.45% (ரூ 206 கோடி) சிட்டிபேங்க் நியூயார்க்குக்கும் போகிறது. ஒரு ஆண்டில் ரூ 939 கோடி ரூபாய் லாபம் பெறும் வேதாந்தா, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் செய்த பங்கு முதலீடு வெறும் 336 கோடி மட்டும். அதாவது 16 ஆண்டுகளில் தனது முதலீட்டுப் பணத்தை பல மடங்கு திருப்பி எடுத்த பிறகு சென்ற ஆண்டு முதலீட்டின் மீது சுமார் 300% லாபம் ஈட்டியிருக்கிறது. இந்த நிருவனத்தில் இருந்து இந்தியாவின் பல அரசியல் கட்சிகளும்  11 மில்லியனுக்கும் மேலான பணத்தை கட்சிக்கான நிதியாக பெற்றிருக்கின்றன என்பதையும் சுட்டி காட்டுகின்றனர் போராட்ட குழுவினர்.
இவர்கள் 5000 கோடி ரூபாய் செலவழித்தால் கூட இதுவரை  நடந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டை மாற்ற இயலாது .இழந்த மனித உயிர் இழப்புகளை மீட்க முடியுமா? 1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.நச்சு வாயு வெளிவந்த அன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.அந்த ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் சேர்ந்து தான் போராடுகிறோம்.ஜனநெருக்கடி உள்ள நகரத்தில் இயங்கும் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்தும் அபாயகரமான இந்த ஆலையை மூடுவது தான் இறுதி முடிவு.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். பணபலம் மிகுந்த இந்த ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் உயிரை கொடுத்தாவது எதிர்கால சந்த்திக்காக இழுத்து மூடுவோம்என்கிறார் பாத்திமா பாபு.
இப்பிரச்சனை குறித்து தூத்துக்குடி மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் கே. கோகுல்தாஸ் அவர்களை தமிழ் ஆழி தொடர்புகொண்ட்து. பிரச்சனை நீதீமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.
இறுதிகட்டத்தை அடைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தற்போது மருத்துவர்களின் குரலும் ஒலிக்க ஆரம்பித்து உள்ளதால் கோடையின் வெப்பத்தை விடவும் நகரம் கொதிநிலையை எட்டியுள்ளது. தொடக்க கட்டமாக 5 மருத்துவர்கள் தங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.ஆய்வின் முடிவுக்காக காத்திருக்கும் போராட்ட குழு அடுத்த கட்டமாக சுமார் 200க்கும் மேற்பட்ட அமைப்புகளிலும் இருந்து தலா இரண்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதலவர் ஜெயல்லிதாவை சந்திக்க தயாராகி வருகிறது .  காட்டுயிர் மேல் கரிசனம் காட்டும் முதலவர் மக்கள் மேல் காட்டுவாரா?
 


Read more...

நாயம்ம்ம்மாரே....!!!- காற்றில் ஒலிக்கும் குரல்




நாயம்ம்ம்மாரே....!!!- காற்றில் ஒலிக்கும் குரல்


புலிப்பொருளாதாராம் !!உலகெங்கும் புலியின் பெயரால் நடைபெறும் வணிகம் மட்டும் பல்லாயிரம் கோடி!  50 பைசா தீப்பெட்டி முதல் ஆயிரம் ஆயிரம் கோடிகளில் புரளும் விளையாட்டு போட்டிகள் வரை ராயல்ட்டி கேட்காத புலிகளை வைத்து நடைபெறும் வியாபாரம்!! அட்சயபாத்திரமாய் இருந்தும் புலிகள் அழிவின் உச்சத்தில் இருப்பது மனித இனத்தின் அடங்காத அத்தனைக்கும் ஆசைப்படும் நோக்கம் தான்!!கட்டற்ற சுரண்டலால் காலாவதியகிறது அப்பாத்திரமும்!!
உலகெங்கும் புலிகளை காக்க பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்தாலும் இப்புவியில் புலிகளின் எண்ணிக்கையும் சரி.. அவை வாழும் பரப்பும் சரி குறைந்து கொண்டே வருவது பூமிபந்தின் அழிவின் குறியீடு!! இந்நிலையில் சத்தியமங்களம் வனப்பகுதியை மத்திய அரசு புலிகள் சரணாலயமாக அறிவித்துள்ளது!! 

வருடம் முழுவதும் இதமான காலநிலை !எங்கு திரும்பினாலும் பசுமை!செவிகள் இனிக்கும் பற்வைகளின் இசை!கண்கள் வியக்க காணுயிர்களின் உலா! மனதை மயக்கும் அமைதி!இப்படி வியப்பு பரவசம் உற்சாகம் என்று மலைக்கவைக்கும் பிரதேசம் சத்தியமங்களம் வனப்பகுதி! மேற்கு மலைத்தொடரும் கிழக்கு மலைத்தொடரும் சங்கமிக்கும் பூமி! மோயாறு பள்ளத்தாக்கில் ஆரம்பித்து திம்பம் மலை வரை. 1400 ச.கிமீ பரப்பளவு..

பிலிகிரிரங்க வனவிலங்கு சரணலாயம்,முதுமலை மற்றும் பந்திப்பூர் தேசிய பூங்காக்களை இணைக்கும் பகுதி. யானைகளின் முக்கிய வலசை பாதை. வனவிலங்குகளின் தொட்டில் எனஅழைக்கப்படும் மிக முக்கிய  தெங்குமராஹாட்டா உள்ளிட்டது.பிளாக் பக் என்னும் அரிய மான் இங்கு தான் அதிகமாக காணப்படுகிறது.மாநிலத்தின் மையப்பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதராமான பவானி மற்றும் மோயாறு செழித்து பாயும் பகுதி.

2004 க்குப் பிறகு இக்காடுகளில் மரக்கொள்ளை ,வேட்டை என்று அச்சுருத்தல் அதிகம் ஆயின.ஊடுருவலும் தனியார் ஆக்கிரமிப்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கியது.பல்வேறு தரப்பினரின் தொடர் கோரிக்கையின் விளைவாக 2008 லில் நவம்பர் 3 ம் தேதி இப்பகுதியின் பல்லுயிர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 அடிப்படையில் வனவிலங்கு சரணலாயமாக மாநில அரசால் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வன உயினங்களின் கணக்கெடுப்பில் ஒவ்வொருமுறையும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது.இதனையடுத்து அவ்வப்போது புலிகள் சரணலாயமாக இப்பகுதியை அறிவிக்க சொல்லியும் எதிர்த்தும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.அதிகரித்து வரும் புலிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு  1,ஏபரல் ,2010லில் தமிழக அரசு சத்தியமங்களம் வனவிலங்கு சரணாலயத்தை புலிகள் சரணாலயமாக மாற்ற முன்முயற்சிகள் எடுக்கப்படும் என அறிவித்தது.

15, ஜூலையில் மத்திய அமைச்சர் ஜெய்ராம ரமேஷ் அப்போதைய தமிழக முதல்வர் கருணாவிற்கு சத்தியமங்களம் வனவிலங்கு சரணாலயத்தை புலிகள் சரணாலாயமாக மற்றுவது குறித்த சாத்தியபாடுகளை பரிந்துரைக்குமாறு கடிதம் எழுதினார். ஏனோ பிந்தைய காலங்களில் இத்திட்டம் மெளனம் மட்டுமே சாதித்தது. 2010லில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பில் இப்பகுதில் 46 புலிகள் இருப்பதாக சொல்லப்பட்டது.

2011 லில் WWF , புகைப்படம் , எச்சங்கள் மற்றும் மரபணு மாதிரி அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குறைந்தப்டசம் 28 புலிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. புலிக்குட்டிகள் தவிர.மேலும் சுமார் 1000  யானைகள்,700 காட்டெருதுகள்,30 சிறுத்தைகள்,2500 புள்ளி மான்கள்,1000க்கும் மேற்பட்ட அழிவின் உச்சத்தில் இருக்கும் பிளாக்பக் மான்கள்,இவை தவிர குரைக்கும் மான்,நான்கு கொம்பு மான்,காட்டுப் பன்றி ,கரடி, செந்நாய் என பல்லுயிர் வளம் செழிக்கும் பகுதி என கணக்கெடுப்புகள் முலம் உறுதிசெய்யப்பட்டது. இதனையொட்டி 2012 ஏபரல் மாத்தில் புலிகள் சரணாலயத்திற்கான  வரைவு திட்டத்தை மாநில அரசு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு  அனுமதி மற்றும் சிறப்பு உதவிகளுக்காக அனுப்பியது. இதற்கிடையில் மாநில சட்ட சபையில் வைக்கப்பட்டு உறுப்பினர்கள் பரிந்துரைகளும் கேட்கப்பட்டது.. 
ஒரு வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கும் முன் மக்கள் கேட்பு கூட்டங்களை கூட்ட வேண்டும் என்பது விதி. அதற்கேற்ப மக்களின் விருப்பங்களை கேட்கும் கூட்டத்தை சத்தியமங்களத்தில் மாவட்ட நிர்வாகம் நடத்தியது. இதில் அப்பகுதிமக்கள் பலத்த எதிர்ப்பை வெளிகாட்டினர்.தீவிர போராட்டங்களும் நடைபெற்றது.

வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டால் அந்த பகுதியில் வளர்ச்சி என்ற பெயரில் எதுவும் செய்யப்படமாட்டது.அப்பகுதிவாழ் மக்கள் தவிர பொதுமக்கள் முறையான அனுமதியின்றி நுழைய இயலாது.அனுமதியோடு நுழைந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும்.சமுக விரோத செயல்கள் கட்டுப்படுத்தப்படும். இப்படி ஒரு பக்கம் வனம் காக்கப்படும் என்றாலும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிகப்படும் என்கிறர்ர்கள் மற்றொரு சாரர்.

காடுசார் பொருட்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்த நிலப்பரப்பு உரிமை பறிக்கப்படும் என்கிறார்கள் சுற்றுச்சூழலியலர்கள் ஒருசாரர்.இதற்குப் பதில் அளிக்கும் மற்றொரு சாரரோ பழங்குடிகளின் மிகமுக்கிய பிரச்சனை கல்வியும் மருத்துவமும்.அங்கே பணியில் அமர்த்தப்படும் அரசு ஊழியர்கள் பெரும்பாலோர் பணிகளுக்கு சரியாக வருவதில்லை. காரணம் உயிர் பயம்!!

பழங்குடிகளுக்கு வன உயிரின்ங்களை  பற்றி நன்கு தெரியும். அவை எப்போது எந்த பாதையில் பயணப்படும் என்பது போன்ற உயிரினங்களை பற்றிய அறிவு.. ஆனால் நகரத்தில் இருந்து வருபவர்களுக்கு அது தெரியாது. உயிர் பயத்தால் அவர்கள் பணிகளுக்கு வருவதில்லை. இது போன்ற.சமுக வாழ்வியல் பிரச்சனைகளை விட்டு விட்டு புலிகள் சரணாலயமாக மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றது.இவர்களும் நகரத்திற்கு விருப்பப் பட்டு வனத்தை விட்டு இடம்பெயர்ந்தால் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் புலிகள் பாதுகாப்பு திட்ட்த்தில் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் தருகிறது மத்திய அரசு என்கிறர்ர் புலிகள் சரணால்யத்தை வரவேற்கும் ஆர்வலர்.

எதிர்ப்பும் ஆதரவும் சற்றே மவுனித்த நிலையில் மார்ச் 15 முதல் சத்தியமங்களம் வனவிலங்கு சரணாலயத்தை புலிகள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வறிப்பின் மூலம் தமிழ்நாட்டின் முதுமலை,களக்காடு முண்டந்துரை மற்றும் ஆணைமலையை தொடந்து நான்காவது புலிகள் சரணாலயமாக சத்தியமங்களம் வரலாற்றில் இடம்பெற்றது.

மயக்கும் மஞ்சள் வரிக்கோடுகளுடன் அழிவின் உச்சத்தில் உள்ள இந்த கூச்ச சுபாவம் உள்ள காணுயிர்க்கு 1.40 லட்சம் ஹெகடரில் இன்னொரு பாதுகாப்பிடம் கிடைத்துள்ளது.அதே நேரத்தில் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் கோள்விக்குரியாகி விடக்கூடாது என்பதையும், புலிகளைக் காப்பாற்றிய அரசு  மறந்துவிடக்கூடாது!!!!

காணுயிர் மேல் காட்டும் கரிசனத்தை எங்கள் மேலும் கட்டுங்கள் என்கிற பழங்குடிகளின் குரல் காற்றில் கரைந்துவிடக்கூடாது.மானிட இனமும் இயற்கையும் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு இணைந்து வாழும் காலம்.....பூவுலகின் பொற்காலம்!!

நன்றி:தமிழ் ஆழி.

Read more...

நீயா? நானா?-துளிரும் பசுமை அரசியல்!!


நீயா? நானா?-துளிரும் பசுமை அரசியல்!!


நிலங்கள் என்பவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலங்களின் பட்டியலில் வருபவை .மத்திய அரசு எந்த வகையிலாவது அந்த நிலங்களை தனது அதிகாரத்தின் மூலம் பயன்படுத்த நினைத்தால் அது மாநில அரசுகளின் தன்னிச்சையான அதிகாரங்களின் மீது  செய்யப்படும் ஆக்கிரமிப்பு - ஜெயல்லிதா. 
 
த்திய அரசின் சார்பில் மேற்கு தொடர்ச்சி சூழலியல் ஆணையம் அமைக்க்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயல்லிதா,பாரத பிரமருக்கு எழுதிய கடிதத்தில் ஆணையம் அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களின் மீது தாக்குதல் நடத்துவது எனக் குற்றம்சாட்டியுள்ளார்!!

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் ஆரம்பிக்கும் இந்த மலைத்தொடர் கோவா,கர்நாடக, கேரளா எனப் பரந்து தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.51 மாவட்டங்கள், 1600 கிமீ நீளம். 160000 ச.கிமீ பரப்பு. கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, கபினி, வைகை, தாமிரபரணி என சுமார் 22 நதிகளுக்குத் தாய்மடி.300 மில்லியன் மக்களுக்கு குடிதண்ணீரை வழங்கும் அமுதசுரபி. 

5000க்கும் மேற்பட்ட தாவரங்கள்; 300 வகையான பாசிகள்; 800 வகையான மரப்பாசிகள்; 600 வகை பூஞ்சைகள் உள்ளன.1500 பூக்கும் தாவரங்களில் 38 சதவீதமும் மரங்களில் 63 சதவீதமும் இங்கு மட்டுமே உள்ளவை. விலங்குகளைப் பொறுத்தவரை, பாலூட்டி வகைகள் 120; நீர்நில வாழ்வன 121; 600 வகை பறவைகள்; ஊர்வனவற்றில் 157 வகை; மீன் இனங்களில் 218 வகை இங்கு வாழ்கின்றன. இதில் 53 சதவீத மீன் வகைகள் மேற்கு மலைத் தொடருக்கே உரியவையாக உள்ளன. இந்தியாவில் உள்ள 9 வகை மான்களில் நான்கு இங்குண்டு. இதில் மிகச்சிறிய கூரை மன்னி’, மிகப்பெரிய வரையாடு இங்குதான் உலவுகின்றன.தேசிய பூங்காங்கள்,புலி சரணாலயங்கள், வனவிலங்கு சரணலாயங்கள் என்று 40 மிக முக்கிய பகுதிகள் அடங்கியது...மேற்கு மலைத்தொடர்- ஒரு பூலோக சொர்க்கம்!!

மேற்கு மலைத்தொடர் நீண்டகாலமாகவே சுரங்கங்கள்,அணைகள் கட்டுதல், நகரமயமாக்கல், ஆறு வற்றுதல்,வேட்டை மற்றும் ஆக்கிரமித்தல் போன்ற மிகப்பெரிய அச்சுறுத்தலில் அழிந்து வருகிறது..இவை மக்களின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் மேலும் மேலும் மக்களைப் படுமோசமான நிலைமைக்கே இட்டுச்செல்கிறது. இம்மலையை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் வன உயிர்களின் வாழ்வாதராமே கேள்விக்குரியாய் தொங்கி நிற்கிறது

1987 இல் மேற்கு மலையைக் காப்போம் என்ற பெயரில் மேற்கு மலைத்தொடரையும் அதைப் சார்ந்து வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 160 அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த நடைப்பயணம் கன்னியா குமரியில் தொடங்கி கோவாவில் முடிவுற்றது.இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகமுக்கியமான சுற்றுச்சூழலுக்கான நிகழ்வு.இதன்  மூலம் மேற்கு மலைத்தொடரைக் காப்போம் என்ற அமைப்பு உருவானது.

கோத்தகிரியில் 2010 பிப்ரவரி 18முதல் 20 வரை நடைபெற்ற மேற்கு மலைத் தொடரை காப்போம் குழுவினரின் மாநாட்டில் அப்போதைய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மேற்குமலைத் தொடரைக் காக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் தேவை என்பதை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தர ஒரு சிறப்பு குழுவை அறிவித்தார்.



மாதவ் காட்கில் தலைமையில் அமைக்கப்பட்ட சூழலியல் குழுவினர் 31 ஆகஸ்ட் 2011 இல் அரசுக்கு  அறிக்கையை சமர்பித்தனர். இவ்வறிக்கையை மத்திய அரசு மேற்குமலைத்தொடர் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி கருத்து கேட்டது .அதனை தமிழ்நாடு தவிர ஏனை அனைத்து மாவட்டங்களும் உடனடியாகப் புறக்கணித்துவிட்டது. மத்திய அரசு உடனடியாக ஆய்வறிக்கையை மறுபரிசீலனை செய்ய மற்றுமொரு குழுவை அமைத்தது. நீண்ட காலமாகவே மவுனம் காத்த  தமிழக முதலவர் ஜெயலலிதா திடிரென்று அந்த அறிக்கையையில் மிக முக்கியமாகச் சொல்லப்பட்ட தேசிய ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. ஒரு பக்கம் அரசியலாகவும் மறுபக்கம் சூழலியர்களிடையே பல்வேறு மாறுபட்ட கருத்துகளையும் இது ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மாநில பிரச்சனையாக உருவெடுப்பதை வருத்ததுடன் பார்க்கும் தியோடர் பாஸகரன் ..  இந்திய அரசியல்சட்டம் 1952இல் அமுலாக்கப்பட்டபோது, காடு மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று அதில் இருந்தபோது காட்டுயிரியலாளர் மா.கிருஷ்ணன் அப்போதே இது மகாபெரியதவறு என்றார். அப்போது காட்டின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கவில்லை. இப்போது, காலநிலைமாற்றம் எனும் பேராபத்து நம்மை சூழ்ந்திருக்கும்போது, அதன்சிறப்பு நமக்குத் தெரிகின்றது. நதிகள் எல்லாம் வரண்டுபோய் மறைந்துகொண்டிருக்கின்றன. இந்தஆபத்தை மட்டுப்படுத்த காட்டில் கைவைக்காமல் இருக்கவேண்டும். மலைகளும் காடுகளும் கனிமச்சுரங்கம், அணை, தோட்டப்பயிர், வெட்டுமரத்தொழில் போன்ற காரியங்களுக்காக அழிக்கப்படுகின்றன. நம் கண்முன்னேயே காடு சுருங்கிவருவதைக் காண்கின்றோம். உலகிலேயே உயிரினங்கள் அடர்ந்துள்ள 18 இடங்களில் மேற்குத்தொடர்ச்சிமலையும் ஒன்று. இதற்கு ஒரு ஆணையம் நிச்சயம் தேவை. மாநில அரசுகள் சுற்றுச்சூழலுக்கோ காட்டுயிர்பேணலுக்கோ முன்னுரிமை அளிப்பதில்லை. சட்டசபைகளில் என்றாவது இந்த விஷயத்தைப் பற்றி விவாதம் நடக்கிறதா பாருங்கள்என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்.

.தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மாநில இருங்கிணைப்பாளர் மோகனராஜ்  ஜெ.வின் நிலைப்பாட்டிற்கு வரவேற்பு தந்தாலும்  மாநில அளவில் சட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். , மேற்கு தொடர்ச்சி மலையில், காடுகளுக்கு வெளியே உள்ள நிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசாங்கம் மலையிட பாதுகாப்பு ஆணையம் (HACA) அமைத்து மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாத்து வருவதாகக் கூறியுள்ளது. ஆனால் மலையிடப் பாதுகாப்பு ஆணையம் (HACA) முறையாக செயல் பட்டிருந்தால் காடுகளுக்கு வெளியே உள்ள நிலங்களில் விதிமுறைகளை மீறிய (ஈசா, காருண்யா, சின்மயா போன்ற) கட்டிடங்கள், கேளிக்கை விடுதிகள், சாலைகள், மின் வேலிகள், உயரமான சுவர்கள், தடுப்பணைகள், சுரங்கங்கள், இரசாயன பூச்சிக்கொல்லிகள்,  இரசாயன உரங்கள், குப்பை கூடங்கள், கழிவுநீர் வடிகால்கள், aசுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள், போன்றவைகளால் பல்வேறு காட்டுயிர்களையும், யானைகள் வழித்தடத்தையும் பாதிக்கும் செயல்கள் நடந்திருக்காது.என்கிறார்.

“.மேற்குமலைத்தொடர் தேசிய ஆணையம் அமையும் போது மத்திய மாநில அரசுகள் யார் குற்றம் செய்தாலும் வெளிப்பட்டுவிடும். இது வனத்தை ராணுவத்தின் கையில் ஒப்படைப்பதற்கு சம்ம். அவ்வளவு எளிதில் அத்துமீறல்கள் இருக்காது “ என்கிறார் பெயரை பதிவு செய்யாவேண்டாம் என்ற கோரிக்கையோடு காணுயிர் ஆர்வலர் ஒருவர்..

ஓசை அமைப்பின் காளிதாஸ் “ஆணையம் அமைக்காவிட்டாலும் மாநில அரசு தற்போது வனத்திற்கு மட்டுமே சட்டங்களை வைத்துள்ளது. ஆனால் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தப்படும் செயல்களினாலும் வனம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. ஆகவே அதையொட்டிய பகுதிகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட சட்டங்களை இயற்றவேண்டும்.அப்போதுதான் வனம் காப்பாற்றப்படும் “ என்கிறார்.

இதே நேரத்தில் முற்றிலும் ஆய்வறிக்கையை ஒதுக்காமல் அதன் சாதக பாதகங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் மோகன்ராஜ் . பூச்சிக்கொல்லிகள், உரங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிர்கள் (Genetically modified organisms), ஒற்றை பயிர்கள் (mono culture plantation), நிலக்கரி மற்றும் கனிம சுரங்கங்கள், அணுமின் மற்றும்  அனல் மின் நிலையங்கள், நீர் மின்நிலையங்கள், பற்றிய நிபுணர் குழு பரிந்துரைகளை வரவேற்கலாம்.மேற்குத் தொடர்ச்சி மலைகள் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் உள்ள முதுமலையில் நுட்டிரினோ ஆய்வுக்கூடம் (Neutrino Observatory) அமைய உதவி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் நுட்டிரினோ ஆய்வுக்கூடம் அமைய உள்ளது. இதைப்பற்றி ஒரே ஒரு வரிதான் அவர்களது அறிக்கையில் உள்ளதுஎன்று தனது ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

அறிக்கையை முற்றிலும் வரவேற்கும் ,சூழலியல் துறையில்  அனுபவசாலியான தியோடர் பாஸ்கரன்  ஆணையத்தில் சுற்றுச்சூழலில் அக்கறைக்காட்டும் அரசியல்வாதிகளும் (அப்படிப்பட்டவர்களை அடையாளம் காணமுடிந்தால்) அறிவியலாளர்களும் இருக்கவேண்டும். இதன் அலுவலகம் தென்னிந்தியாவில் அமையவேண்டும்..ஆணையம் தன்னார்வக் குழுக்களுடன் இணைந்துசெயல்படவேண்டும். அதுமட்டுமல்ல காடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான ஆதிவாசிகளின் நலனை மனதில் கொண்டு அவர்கள் வாழ்வாதாரங்களுக்கு வளம் சேர்க்க, ஆணையத்திற்குத் தேவையான அதிகாரம் கொடுக்கப்படவேண்டும். வெறும் பிரசங்கத்துடன் நின்று, வர்மா கமிட்டிக்கு ஆனகதி இதற்கும் வந்துவிடக்கூடாதுஎன தனது ஆஅதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

இயற்கை வளங்கள் மத்திய மாநில அரசுக்கானதல்ல.. அது உலகம் முழுமைக்கும் சொந்தமானது என முன்மொழியும் மருத்துவர் ஜீவானந்தம். “வனம் மாநிலங்களுக்கு சொந்தமானது.மாநிலங்கள் தேசத்தின் அங்கம்.மாநிலத்தின் உரிமைகளை தேசிய அரசு பறிக்கக்கூடாது.அதே சமயம் மாநிலத்தின் கடமைகளை வலியுறுத்தகூடிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. சுயநலமிக்க கட்சிகள் மாநில ஆட்சிக்கு வரும்போது இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதை அண்டைய மாநிலமான கர்நாடகத்தில் கண்கூடாகக் கண்டோம்!! இயற்கை வளங்களைக் கண்கானிக்கவும் கட்டுப்படுத்தவும்  மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது மக்களுக்கு நல்லது. கடந்த 65 ஆண்டுகளில் வெள்ளையர்களால் மிச்சம் வைக்கப்பட்ட 25 % இயற்கை வளம் தற்போது 12.5 % ஆகக் குறைந்துபோனது!! இதுவரை மாநிலத்தின் கைகளில் மட்டுமே வனம் உள்ளதை நினைவில் வையுங்கள். உரிமையைக் கேட்கும் அதேநேரத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வளத்தைப் பாதுகாக்கும் கடமையையும் தமிழக அரசு மறந்துவிடக்கூடாது!!மேற்கு மலைத்தொடர் மத்திய மாநில அரசுகளின் சொத்து அல்ல. இந்தியாவின் சொத்தும் அல்ல.. அது உலக மக்களின் சொத்து.அதனால் தான் ஜப்பான் ஏற்கெனவே இந்த வளங்களைப் பாதுகாக்க 450 கோடி ரூபாய் மான்யமாகத் தந்துள்ளது. மேலும் பல நூறு கோடிகளைக் கொடுக்கத் தயாராக உள்ளது. திட்டங்களை உருவாக்கி அதைப் பொதுவில் அறிவித்து மத்திய மாநில அரசுகள் செயலாக்கும் முறையை மக்கள் தான் கண்காணிக்க வேண்டும்!!.என்கிறார்.

முத்தாய்ப்பாக இந்தக் கட்டுரையை மருத்துவர் ஜீவானந்தம் அவர்களின் சொற்களில் முடிப்பதே இயற்கைக்கு செய்யும் கைமாறாக இருக்கும்.  இதில் உரிமையா ...கடமையா என்றால் மத்திய மாநில அரசுகள்  கடமையைச் செய்யட்டும் .. காரணம் வனவளம் ஒட்டுமொத்த மக்கள் இனத்தின் உரிமை!!

நன்றி:தமிழ் ஆழி.

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP